வவுனியாவில் சடலம் மீட்பு
9 July 2008 செய்திகள்கருகிய நிலையில் வவுனியா மஹரம்பைக்குளம், காத்தார்சின்னக்குளம் பகுதியில் இருந்து ஆண்ஒருவரின் சடலம் நேற்றுக்காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது இச்சடலம் அடையாளம் காணமுடியாத அளவில் கருகிப்போய் இருப்பதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர் இந்தச்சடலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது இச்சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் இதேவேளை கிரிஹில்லாயில் இருந்து முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட 650 ஜெலிக்னைட் குச்சிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் இந்த ஜெலிக்னைட் குச்சிகளை சிலாபம் கொண்டு சென்று கல்பிட்டி ஊடாக மன்னாருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் புலிகள் இயக்கத்துக்கு நிதியுதவி அளித்தவருக்கு 57 மாத சிறை
8 July 2008 செய்திகள்ஐக்கிய அமெரிக்க அரசு புலிகள் அமைப்பை சர்வதேசப் பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுச் சட்டபூர்வமாக அந்த அமைப்பையும் அதன் செயற்பாடுகள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகளையும் தடை செய்த பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அமெரிக்க பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிஸார் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் புலிகள் இயக்கத்தினைத் தேடி தீவிர தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இதன் பயனாக புலிகள் இயக்க உறுப்பினர்கள், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டோர் எனச் சந்தேகிக்கப்பட்ட பலரை இதுவரையில் அமெரிக்க பெடரல் பொலிஸார் கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக அண்மையில் புலிகள் அமைப்புகள் நிதி சேகரிப்பு மற்றும் புலிகள் இயக்கக் குழுவினருக்கு ஆதரவளித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் திருநாவுக்கரசு வரதராஜா எனப்படும் ஸ்ரீலங்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட 37 வயதுடைய தமிழரை பெடரல் பொலிஸார் கைது செய்திருந்தனர். விசாரணைகளின் பின்னர் மேற்படி நபரைத் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்காகச் செயற்பட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் பெடரல் பொலிஸ் பிரிவு வழக்குத் தொடுத்தது. தற்போது விசாரணைகளின் மூலம் மேற்படி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் மேற்படி திருநாவுக்கரசு வரதராஜா எனப்படும் நபருக்கு அவருடைய பல்வேறு பயங்கரவாதத் தொடர்புக் குற்றங்களுக்கு மாறாக மொத்தம் 57 மாத சிறைத் தண்டனையை அமெரிக்க சமஷ்டிப் பிரதேச பெண் நீதிபதியாகிய கெதரின் சீ.பிளேக் விதித்துள்ளார். இந்தச் சிறைத் தண்டனை மேற்படி நபர் செய்துள்ள பிரதான குற்றங்களாகிய அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகிய புலிகள் இயக்கத்துக்காக அமெரிக்காவில் நிதி சேகரித்தது மற்றும் குறித்த புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் குழுவினருக்கு உதவி செய்தது ஆகிய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுவதாக நீதிமன்றம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணாக மாறும் தனது உடலுக்கு சிகிச்சையளிக்க பிரிட்டன் பாடகர் கோரிக்கை
8 July 2008 செய்திகள்பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பாடகர் ஒருவர் தனது உடலில் பெண்ணுக்கு உரித்தான மாற்றங்கள் அதிவேகமாக நடந்து வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்துவதற்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரைச் சேர்ந்தவர் டெரி ரைட், பொது நிகழ்ச்சிகளில் பாடுபவர். தனது உடலில் பெண்ணுக்கு உண்டான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, 10 ஆண்டுகளுக்கு முன்பு தலைமுடி கொட்ட ஆரம்பித்தது. மீசை தாடியும் உதிர்ந்தன. தோல் மென்மையாக ஆரம்பித்தது. மார்பகமும் பெரிதாகியுள்ளது. பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்னை “ஷீமேன்’ என்று கூறி கிண்டல் செய்கின்றன. ஒரு நாள் குழந்தை ஒன்று என்மீது மோதிவிட்டத. அதற்கு அதன் அம்மா, “”அந்த ஆன்ட்டிகிட்ட மன்னிப்புக் கேளு’ என்று சொல்லி கேவலப்படுத்திவிட்டாள். நான் ஆண்தான். பெண் அல்ல. பெண்ணாக மாற நான் எந்தச் சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை. தானாக இப்படியெல்லாம் நடக்கிறது. நான் ஆணாகவே இருக்க சிகிச்சை அளியுங்கள் என்று எத்தனையோ டாக்டர்களிடம் கேட்டுவிட்டேன். யாருக்கும் தெரியவில்லை. 5 பிள்ளைகளுக்கு தகப்பன் நான். 60 வயதில் ஏன் இந்தச் சோதனையோ! எனத் தெரிவித்தார். சந்தேகப்பட்ட டாக்டர்கள் அவர் மனநிலை சரியில்லாதவரா என்றும் சோதனை நடத்திப் பார்த்தனர். நன்கு தெளிவாகத்தான் இருக்கிறார் என்று மனநல டாக்டர் கூறிவிட்டார். பெண்களது ஹார்மோன் ஈஸ்டிரோஜன் சுரப்பு இவரது உடலில் அதிகம் இருப்பதாக ரத்தப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தங்களது மருத்துவ அனுபவத்தில் இது போல கேள்விப்பட்டதில்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
தெற்கில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு
8 July 2008 செய்திகள்தென் பிராந்தியத்தில் பல இடங்களில் தொடர்ந்தும் நடைபெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்களும் வர்த்தகர்களும் அச்சமடைந்துள்ளனர். மாத்தறை உடபீக்வெல்ல பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு ஆயுதங்களுடன் வந்த இருவர் அவரையும் குடும்பத்தினரையும் மிரட்டி விட்டு 2 இலட்சம் ரூபா பணம் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். காலியில் கடந்த வெள்ளிக்கிழமை பகல் சமுர்த்தி வங்கியில் புகுந்த இருவர் ஆயுதமுனையில் ஊழியர்களை மிரட்டி, அங்கிருந்த பணம் அடகு நகை என்பனவற்றை கொள்ளையடித்துச் சென்றுளள்னர். காலி களுவங்கேணியில் புதன்கிழமை இரவு எரிபொருள் விற்பனை நிலையத்தில் விற்பனைப் பணம் 34 ஆயிரத்து 500 ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காலி நகரில் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்து அவரது கடைக்கு ஊழியர் ஒருவர் புதன்கிழமை ஒரு இலட்சம் ரூபாவை சைக்கிளில் எடுத்துவரும் போது கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டியவில் சப்ரகமுவ அபிவிருத்தி வங்கியில் 2 இலட்சம் ரூபா கொள்ளையடிக்கப்பட்டது. இவற்றை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே செய்திருப்பதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவங்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டு யானை தாக்கி இராணுவ வீரர் பலி
8 July 2008 செய்திகள்விக்டோரியா நீர்த்தேக்கத்தின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரு இராணுவ வீரர்களில் ஒருவரை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
இராணுவ பதுங்கு குழியில் இருந்து கடமைபுரிந்த இவ்விரு இராணுவ வீரர்களில் ஒருவர் பதுங்கு குழியைவிட்டு வெளியே வந்து நின்றபோது அங்கு வந்த காட்டு யானை அவரைப் பிடித்து தாக்கியுள்ளது. இதனை பதுங்கு குழியில் இருந்து கண்ட மற்ற இராணுவ வீரர் உடனடியாக அந்த யானையை தனது துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார். கங்குரங்கெத்த பகுதியைச் சேர்ந்த ரி.எம்.கருணதாஸ என்ற இராணுவ வீரரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார். இப்பகுதியில் காட்டு யானைகள் அண்மைக்காலங்களில் உணவு தேடி கிராமப்புறங்களுக்கு வருவதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.
திருமலையில் மூவரைக் காணவில்லை ஆட்டோவில் வந்து சிறுவன் கடத்தல்
8 July 2008 செய்திகள்திருகோணமலை ஹோமரங்கடவெல பகுதியில் மூன்று தமிழர்கள் காணாமல் போயுள்ள அதேநேரம், திருமலை உப்புவெளிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறுவனொருவன் கடத்தப்பட்டுள்ளான். ஹோமரங்கடவெல காட்டுப் பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை விறகு சேகரிப்பதற்காக நான்கு தமிழர்கள் சென்றுள்ளனர். இவர்களில் கணவன் மனைவியும் அடங்குவர். இந்த நால்வரில் கணவன் மனைவி உட்பட மூவர் பின்னர் காணாமல்போன நிலையில் ஒருவர் மட்டும் வீடு திரும்பியுள்ளார். ஏனைய மூவருக்கும் என்ன நடந்ததெனத் தெரியவில்லை. இது குறித்து மேற்படி மூவரதும் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதேவேளை, நேற்றுக் காலை உப்புவெளி காந்திநகர் பகுதியில் வீடொன்றிலிருந்து 15 வயதுச் சிறுவனொருவன் கடத்திச் செல்லப்பட்டுள்ளான். இவனது தாயும், தந்தையும் வீட்டிலில்லாத போது ஆட்டோ ஒன்றில் அங்கு வந்தவர்கள் இந்தச் சிறுவனைக் கடத்திச் சென்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் குறித்து எதுவும் தெரியவரவில்லை. இது குறித்து உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரும்புலிகள் தின நிகழ்வில் பிரபாகரன் தளபதிகளுடன் அஞ்சலி
8 July 2008 செய்திகள்வன்னியில் பிரத்தியேக இடமொன்றில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற கரும்புலிகள் தின நிகழ்வில் முதற்கரும்புலி கப்டன் மில்லரின் உருவப்படத்துக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஈகைச் சுடரேற்றி மலர்மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணி, மறைமுகக் கரும்புலிகளின் உருவப்படம் உள்ளிட்ட 356 கரும்புலி உருவப்படங்களுக்கு திருமதி மதிவதனி பிரபாகரன், கட்டளைத் தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், கரும்புலிப் படையணிப் போராளிகள், போராளிகள் ஆகியோர் ஈகைச் சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் தொடங்கின. கரும்புலிகள் பாடல்களுக்கு மாவீரர் நடனம் இடம்பெற்றது. தலைமையுரையை இராஜன் கல்விப் பிரிவுப் போராளி நிலவன் ஆற்றினார். தொடர்ந்து புலிகளின் தலைவர் வாழ்த்துப் பாடலுக்கான கரும்புலிப் படையணிப் போராளிகளின் நடனம் இடம்பெற்றது. நிகழ்வில் ஆறு வெளியீடுகள் வெளியிட்டு வைக்கப்பட்டன.
சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வுகளில் பெருந்திரளான மக்கள்..
8 July 2008 செய்திகள்விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை முற்றாக அர்ப்பணித்து போராடி உயிர்நீத்த போராளிகள் பொதுமக்கள் என அனைவரையும் ஒரே தருணத்தில் நினைவு கூருமுகமாக 05.07.08 அன்று சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் அப்போல்டன் எனும் இடத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சர்வதேச ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வீரமக்கள் தின நிகழ்வுகளில் சுவிர்சர்லாந்தின் சகல மாநிலங்களிலும் இருந்தும் பெருந்திரளான மக்கள் கூட்டமும் ஜேர்மன் பிரான்ஸ் நாடுகளில் இருந்து கழக, ஏனைய அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்து தமது நினைவஞ்சலிகளை உணர்வு பூர்வமாக செலுத்தினர். மரணித்த அந்த மகத்தான மனிதர்கள் அனைவருக்குமான நினைவுச்சுடர் ஈபிஆர்எல்எப் சுவிஸ்கிளைத் தோழர் செந்தாவினால் ஏற்றப்பட்டு ஆரம்பமான நிகழ்வுகளில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் சகல அமைப்புக்களையும் சேர்ந்த உறுப்பினர்கள் வீரமக்களுக்கு மலரஞ்சலி செலுத்தி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.

சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் மாற்றுத் தமிழ் அமைப்புக்களும் பங்கேற்பர்: றஜீவ விஜயசிங்க
8 July 2008 செய்திகள்சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் மாற்றுத் தமிழ் அமைப்புக்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க அறிவித்துள்ளார். கொழும்பில் திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அரசாங்கம் இப்போதும் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு தயாராகவே உள்ளது. எனினும் புலிகள்தான் அதற்கான சமிக்ஞையை முதலில் தெரியப்படுத்த வேண்டும். புலிகள் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஊடகங்கள் வாயிலாக அறிவித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் பேச்சுவார்த்தையில் உண்மையான நம்பிக்கை கொண்டிருந்தால் நோர்வே ஊடாக அரசாங்கத்திற்கு அறிவிக்கலாம். இல்லையேல் அரசாங்கத்தை நேரடியாகவேனும் தொடர்பு கொள்ளலாம். தற்போதைய நிலையிலும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால் புலிகளுடன் மட்டுமே இனிமேல் பேச்சுவார்த்தை நடைபெறாது. ஏனெனில் அவர்கள் மட்டும்தான் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் அல்லர். எதிர்வரும் காலங்களில் பேச்சுவார்த்தைக்கு புளொட், ஈ.பி.டி.பி, ரி.எம்.வி.பி. மற்றும் ஆனந்தசங்கரி போன்றவர்களும் அழைக்கப்படுவர். மாற்றுத் தமிழ் அமைப்புக்கள் பேச்சுவார்த்தையில் பங்குபற்றக் கூடாது என்ற புலிகளின் கோரிக்கையை இனிமேல் ஏற்கமுடியாது என்றார் அவர்.
வவுனியாவில் எரிக்கப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
8 July 2008 செய்திகள்வவுனியாவில் முகம் அடையாளம் தெரியாதளவுக்கு எரிந்து உருக்குலைந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, மாறம்பைக்குளத்தில் நேற்று திங்கட்கிழமை காலை எரியூட்டப்பட்ட நிலையில் இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் கிடந்த இந்த சடலம்; முகம் அடையாளம் தெரியாதளவுக்கு எரிந்து உருக்குலைந்துள்ளது. இதனால் சடலத்தை அடையாளம் காணமுடியவில்லை என வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்காவில் “மிக்’ தரையிறங்கிய போது ஓடு பாதையை விட்டு விலகிச் சென்றது
7 July 2008 செய்திகள்கட்டுநாயக்கா விமான நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை “மிக்27′ ரக தாக்குதல் விமானம் விபத்துக்குள்ளானது. வன்னியில் நேற்றுப் பிற்பகல் தாக்குதலை நடத்தி விட்டு கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்திற்குத் திரும்பிய “மிக்27′ ரகத் தாக்குதல் விமானமே ஓடு பாதையிலிருந்து விலகிச் சென்றதால் விபத்துக்குள்ளானது. எனினும், விமானத்திற்கு மோசமான சேதமெதுவும் ஏற்படவில்லையென்றும் விமானிக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் விமானப் படையினர் தெரிவித்தனர். விமானம் தரையிறங்கிய போது அதன் சக்கரத்திலேற்பட்ட கோளாறு காரணமாகவே விமானம் ஓடு பாதையிலிருந்து விலகிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், விமானத்திற்கு சேதமேற்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்த போதும் விமானப் படையினர் அதனை மறுத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேநேரம், நேற்று மாலை 4 மணியளவில் கிளிநொச்சிக்கு கிழக்கே காட்டுப் பகுதியில் இந்த “மிக்’ விமானம் கடும் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை தினம் - பிரபாகரன் அஞ்சலி
7 July 2008 செய்திகள்விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படைப் பிரிவான கரும்புலிகள் பிரிவின் 21வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் கரும்புலிகள் படையின் முதல் வீரரான காப்டன் மில்லரின் படத்திற்கு பிரபாகரன் மாலை அணிவித்து, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணி உள்ளிட்ட 356 கரும்புலி வீரர்களின் படங்களுக்கு பிரபாரகரனின் மனைவி மதிவதனி பிரபாகரன், விடுதலைப் புலிகள் மற்றும் கரும் புலிகள் அமைப்பின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் உள்ளிட்டோர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பல்வேறு கரும்புலிகள் பிரிவு பாடல் சிடிக்களை பிரபாகரன் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பாடல் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்டவையும் நடைபெற்றன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கரும்புலிகள் நாள் அனுசரிக்கப்பட்டது. கரும்புலிகள் படை 1987ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி உருவாக்கப்பட்டது. அது முதல் இதுவரை மொத்தம் 356 கரும்புலி வீரர்கள் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளனர். இவர்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1200, காயமடைந்தோரின் எண்ணிக்கை 3500க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் அருகே உள்ள நெல்லியடியில்தான் முதல் கரும்புலி தாக்குதல் நடந்தது. அங்கிருந்த ராணுவ முகாம் மீது வெடிகுண்டுகள் நிரப்பபப்பட்ட லாரியுடன், கரும்புலிகள் படையைச் சேர்ந்த கேப்டன் மில்லர் என்பவர் தாக்குதல் நடத்தினார். இதில் மில்லர் மற்றும் 39 இலங்கை வீரர்கள் உயிரிழந்தனர். கரும்புலிகளின் தாக்குதலில் மிகவும் பரபரப்பானதும், பயங்கரமானதுமாக ராஜீவ் காந்தி படுகொலை விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கரும்புலிகள் பிரிவின் தலைவராக உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் செயல்பட்டு வருகிறார். கரும்புலிகளின் கடற்பிரிவு தலைவராக சூசை திகழ்கிறார்.
முரண்பாடுகள் தொடர்பிலான கேள்விக்கு கருணாஅம்மான், பிள்ளையான் பதில்
7 July 2008 செய்திகள்கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி குறித்து எனக்கும் கருணா அம்மானுக்குமிடையில் எதுவித கருத்து முரண்பாடுகளும் கிடையாதென கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் நேற்று தெரிவித்துள்ளார். நாடு திரும்பியுள்ள கரணாவிற்கும் பிள்ளையானுக்கும் முதலமைச்சர் பதவி குறித்து பேச்சுக்கள் நடைபெற்றதா? முரண்பாடுகள் உள்ளதா?வென செய்தியாளர் கேட்டபோதே அவர் இந்தப் பதிலை அளித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா கட்சியின் வளர்ச்சி, கட்சியின் நிர்வாகம் குறித்து கவனம் செலுத்தும் அதேவேளை கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக முதலமைச்சருக்குரிய கடமைகள் குறித்து கூடிய கவனம் செலுத்துவதுடன் கிழக்கின் அபிவிருத்தி, மக்களின் மீள்குடியேற்றம், வேலைவாய்ப்பு, உள்ளிட்ட விடயங்களில் நான் கவனம் செலுத்துவேன். இந்த விடயங்களில் எமக்கிடையே எவ்வித முரண்பாடும் வேறுபாடும் கிடையாது என்றும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். கருணா அம்மான் இதுபற்றி தெரிவிக்கையில், எனது விருப்பின் பேரில் நான் பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பினேன். எனது மக்களுக்கு செய்யவேண்டிய பணிகளை கருத்திற் கொண்டே நான் நாடு திரும்பினேன். கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி எனக்கு கிடைக்க வேண்டுமென்று நான் விரும்பவில்லை பிள்ளையான் அப்பதவியில் இருப்பதை நான் வரவேற்கிறேன். எமது கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், பிள்ளையான் முதலமைச்சராக தேர்வானது பற்றியும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்றும் தெரிவித்துள்ளார்.
73வது பிறந்த நாளை கொண்டாடினார் தலாய் லாமா
7 July 2008 செய்திகள்திபெத்திய மத குரு தலாய் லாமா தனது 73வது பிறந்த நாளை அமைதியான முறையில் கொண்டாடினார். ஜெட்சன் ஜம்பெல் கவாங் லோப்சாங் யெஷே டென்ஜின் கியாட்சோ என்ற இயற்பெயரைக் கொண்டவர் தலாய் லாமா. 1935ம் ஆண்டு, ஜூலை மாதம் 6ம் தேதி பிறந்தவரான தலாய் லாமா, 1950ம் ஆண்டு திபெத்திய புத்த மதத்தின் 14வது குருவாக (தலாய் லாமா) பொறுப்பேற்றார். திபெத்தின் குயிங்காய் மாகாணத்தில் உள்ள டக்ட்செர் என்ற கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு 5வது பிள்ளையாக பிறந்தவர் தலாய் லாமா. இவரது பெற்றோருக்கு மொத்தம் 16 குழந்தைகள். இவர் பிறந்த 2வது வருடத்தில் 13வது தலாய் லாமாவின் மறு பிறவியாக அறிவிக்கப்பட்டார். 1950ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி, 15வயதாக இருந்தபோது, 14வது தலாய் லாமாவாக நியமிக்கப்பட்டார். திபெத்திய நிர்வாகத்தையும் அது முதல் மேற்கொள்ள ஆரம்பித்தார். உலகெங்கும் உள்ள திபெத்தியர்களால் தலாய் லாமா பெரிதும் மதிக்கப்படுகிறார். இந்தியாவின் தர்மசாலாவில் திபெத்திய அரசை நிறுவி அதன் தலைவராக இருந்து வருகிறார். திபெத்தை சீனாவின் பிடியிலிருந்து மீட்கும் போராட்டத்தையும் சளைக்காமல் நடத்தி வருகிறார். அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள தலாய் லாமா, உலகின் மிகப் பிரபலமான புத்த துறவியாகவும் விளங்குகிறார்.
ஆசிய கோப்பை: இலங்கை அணி மீண்டும் சாம்பியன்
7 July 2008 செய்திகள்மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டி வரை வந்து கோப்பையைக் கோட்டை விட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. நேற்று கராச்சியில் நடந்த ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோற்றது இந்திய அணி. இந்தியாவை நான்காவது முறை ஆசியக் கோப்பை இறுதியில் இலங்கை அணி தோற்கடித்துள்ளது. இந்திய அணியின் 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை இலங்கை தக்க வைத்துக் கொள்ள உதவினார் சுழற்பந்து வீச்சாளர் மெண்டிஸ். டாஸில் வென்ற இந்திய கேப்டன் டோணி முதலில் இலங்கையை பேட் செய்யச் சொன்னார். ஜெயசூர்யாவும், சங்கர்க்கராவும் இலங்கையின் இன்னிங்ஸைத் துவக்கினர். இரண்டாவது ஓவரில் சங்கர்க்கரா ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஆனால் ஜெயசூர்யா மட்டும் அசரவில்லை. வெளுத்துக் கட்டினார். 56 ரன்களை அவர் எடுத்திருந்தபோது, ஒரு கடினமான கேட்சை கோட்டை விட்டார் ஆர்பி சிங். அதன் விளைவு, அவரது அடுத்த ஓவரிலேயே 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் என விளாசித் தள்ளினார் ஜெயசூர்யா. 76 பந்துகளில் தனது 27-வது சத்த்தைப் பூர்த்தி செய்தார் ஜெயசூர்யா.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 65 வது ஆண்டு விழா
7 July 2008 செய்திகள்1943 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 65 வது ஆண்டு நிறைவு விழா இன்று (04.07.2008) நடைபெற்றது. மஹரகம இளைஞர் மத்திய நிலையத்தின் மண்டபத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜா கொலுரே பொதுச்செயலாளர் டியூ குணசேகரா ஆகியோர் உரைநிகழ்த்தினர். இவ்விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த இந்திய மாக்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சபை உறுப்பினரும், சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளருமான சீதாராம் ஜெய்சூரி வருகை தராததால் அவரது செய்தியுடன் வந்திருந்த மாக்ஸிய கம்யூனிஸ் கட்சியின் பிரதிநிதி தோழர் வரதராஜன் விழாவில் உரையாற்றினார். லங்காசம சமாஜ கட்சியை சேர்ந்த அமைச்சர் திஸ்ஸவிதாரண, புதிய இடதுசாரி மு;னனணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார பத்மநாபா ஈபிஆர்எல்எவ் பொதுச்செயலாளர் தி.சிறீதரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் ஐக்கிய தேசிய முன்னணி தலைவியும் அமைச்சருமான பேரியல் அஷ்ரப், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானர் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வடமத்திய, சப்பிரகமுவ மாகாணசபைத் தேர்தல்கள், கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடுபிடிப்பு
7 July 2008 செய்திகள்சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபை தேர்தல்களுக்கான பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்குடனுமான விசேட கூட்டமொன்று அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளது. குறிப்பிட்ட மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலீஸ் மாஅதிபர்களின் பங்களிப்புடனும் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளின் தலைமையிலும் இவ்விசேட கூட்டம் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள பொலீஸ் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவென மாவட்ட செயலகங்களில் தனியான பொலீஸ் பிரிவுகள் அமைக்கப் பட்டுள்ளன. வட மத்திய சப்பிரகமுவ மாகாணங்களில் தேர்தல் கடமைக்கென சுமார் 8ஆயிரம் பொலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 12ம் திழகதி காலை 9மணிக்கு இவ்விசேட கூட்டம் நடத்தப்படவுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலர் மாலினி பிரேமரட்ண கூறினார். இதேவேளை வேட்பாளர்களின் பாதுகாப்புக்காக பொலீசாரை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய பிரதி பொலீஸ் மாஅதிபர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இலக்கங்களை வழங்கும் நடவடிக்கைகளை நாளை மறுதினம் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் மேற்கொள்ளவுள்ளது. வடமத்திய சப்பிரகமுவ மாகாணசபைத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
புலிகள் அமைப்பிலிருந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பிரபாகரனும், பொட்டுவுமே காரணம் -கருணாஅம்மான்
7 July 2008 செய்திகள்மனித உரிமை மீறல்களினை மேற்கொண்டதாகத் தெரிவித்து என் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுவது வேடிக்கையான விடயம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார். லண்டனிலிருந்து இலங்கை திரும்பியதும் லண்டன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் அதன் இராணுவத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தியதாகவும் அதன்போது பல தாக்குதல் நடவடிக்கையினை தான் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ள கருணா எனினும் அந்தக் காலப்பகுதியில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானையும் விசாரணை செய்ய வேண்டிய தேவையுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மனைவி பிள்ளைகளைப் பார்ப்பதற்காக பிரித்தானியா சென்றதாகவும் அங்கு தங்கியிருக்கும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு செய்ய வேண்டியப பல கடமைகள் தன்னிடம் உள்ளதாகவும் எனவே சுயவிருப்பின்பேரில் நாடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை விரைவில் கருணா அம்மானை தான் சந்திக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். தமது கட்சியின் தலைவர் கருணா அம்மான் எனத் தெரிவித்துள்ள அவர் முதலமைச்சர் பதவி குறித்து எந்தவிதமான சிக்கலும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.


