எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம்..!

செய்திகள்

எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாகத் கூறப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க நேற்று இந்தியாவிற்கு பயணமானதாகவும், நாளை அவர் நாடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், என்ன காரணத்திற்காக ரணில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. நாட்டின் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள விஜயம் தொடர்பில் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜெனரல் சரத்பொன்சேகாவும், ஊடகச் செயலரும் இராணுவப் பொலீசாரினால் கைது..!!

செய்திகள்

முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் முப்படைகளின் பிரதானியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத்பொன்சேகாவும் அவருடைய ஊடகச் செயலாளரான சேனக்க டி சில்வாவும் இன்றிரவு சுமார் 8மணியளவில் இராணுவப் பொலீசாரினால் விசாரணைக்கென கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகா கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருப்பதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலதிக தகவல்கள் தொடரும்

நாம் தனித்தே போட்டியிடுவோம். மக்கள் ஈபிடிபி க்கு வாக்களிக்க மாட்டார்கள் - ஆனந்தசங்கரி..!

செய்திகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் தனித்தே போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை தவறான பாதையில் வழிநடாத்தியுள்ளதாகவும் , ஈபிடிபியினர் தனித்து போட்டியிட்டால் அவர்கள் யாழ் குடாநாட்டில் மேற்கொண்டுள்ள ஆடாவடித்தனங்கள் மற்றும் கொலைகளில் விரக்தியடைந்துள்ள மக்கள் அவர்களுக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளதுடன், அரசாங்கம் தேர்தலில் போட்டியிடாது விட்டால் தமது கட்சி 5 மேலான ஆசனங்களைக் கைப்பற்றும் எனவும் த நேசன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தலில் 15 விடயங்கள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை மக்கள் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக இந்திய வடிவிலான பெடரல் ஆட்சி முறை விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்காக சுவிஸ் தூதரகத்தில் இலங்கையின் 62வது சுதந்திரதின நிகழ்வுகள்- (புகைப்படங்கள் இணைப்பு)

செய்திகள்

இலங்கையின் 62ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெனீவாவில் அமைந்துள்ள சுவிஸ்லாந்துக்கான இலங்கை தூதுவராலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (05.02.2010) சுதந்திரதின கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. சுதந்திரதின நிகழ்வுகளின் போது தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பெருமளவில் பங்கேற்றிருந்தனர். மூவினங்களையும் சேர்ந்த குழந்தைகள் குத்துவிளக்கேற்றி வைத்ததுடன், சர்வமதத் தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் சுதந்திரதின நிகழ்வுகள் ஆரம்பமாகின. சுவிஸ்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் திருமதி.கேணுகா செனவிரத்ன இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை சுவிஸ்லாந்துக்கான இலங்கைத் தூதுவராலய முதலாவது செயலாளர் திரு.ஜவ்பர் தொகுத்து வழங்கினார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம ஆகியோரின் சுதந்திர தினச் செய்திகளும் அங்கு வாசிக்கப்பட்டது. அவர்களின் சுதந்திரதினத் செய்திகள் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கூறப்பட்டது.

புளொட் ஜேர்மன்கிளையின் அறிவித்தல்..

செய்திகள்

250px-plote.jpgதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் Germanகிளைக் கூட்டம் 6.2.2010அன்று Stuttgartஇல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கையில் தமிழ் மக்களுடைய எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சியினுடைய அவசியம் புரிந்து கொள்ளப்பட்டதுடன் எதிர்காலத்தில் ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணிக் கட்சியை (PLOTE -D.P.L.F) தேர்தலில் வெற்றியடைய முழுமுயற்சியுடன் செயற்படுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கழக அனுசரணையுடன் ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F) யின் செயற்பாட்டுக்கு Germanyயின் அனைத்து பிராந்தியங்களுக்கும் பிராந்திய அமைப்பாளர்களை நியமிப்பதுடன் கழக கடந்தகால ஆதரவாளர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. எனவே கடந்தகால ஆதரவாளர்களையும் அங்கத்தவர்களையும எம்முடன் இணைந்து செயற்படுவதற்கு பின்வரும் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம். நன்றி! -தொடர்புகட்கு: 07154181312 (00497154181312), E-Mail: dplfgermany@ymail.com

வெற்றிலையா படகா என்பது ரி.எம்.வி.பியின் நிலைப்பாடு விரைவில் வெளிவரும்..

செய்திகள்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் புலிகள் கட்சி, தனித்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பிலுள்ள முதலமைச்சர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தின்போது, அதில் பங்கேற்ற பெரும்பாலானோர், கட்சி பொதுத்தேர்தலில் தனித்தே போட்டியிடவேண்டும் என தமது விருப்பத்தை வெளியிட்டனர். இந்தநிலையில் இந்த விருப்பத்தை உடனடி தீர்மானமாக எடுக்காது, எதிர்வரும் வாரத்திற்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து நிலைமையை விளக்கிய பின்னர் முடிவை எடுப்பதென கட்சி இன்று தீர்மானித்ததாக கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். கிழக்கிலுள்ள தமிழ்மக்கள் வெற்றிலைக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்ற அடிப்படையிலேயே தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் தமது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு விளக்கவுள்ளனர். ஜனாதிபதி இதற்கு சம்மதிக்காவிட்டால் வெற்றிலையிலேயே போட்டியிட வேண்டியேற்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கண்காட்சி பார்க்க வந்த மாணவன் நீரில் மூழ்கி மரணம்

செய்திகள்

கண்டி பள்ளேகலயில் நடக்கும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பார்க்க வந்த மடவளயைச் சேர்ந்த மாணவன் நீரில்மூழ்கி மரணமடைந்துள்ளான். மடவளையைச் சேர்ந்த முகமட் அஸ்வர் என்ற 13வயது மாணவன் கண்காட்சியை பார்த்தபின் பலகொல்ல ஆற்றில் நீராடசென்ற வேளையில் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளான் என பலகொல்ல பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லசந்தவின் படுகொலை குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு கைதான சந்தேகநபருக்கு அழுத்தம் -சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

செய்திகள்

சண்டேலீடர் செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளகூறி அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். அதிகாரிகள் இந்தக்கொலை தொடர்பில் கெப்பிட்டிவெலனவிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் இந்தக் குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு அவரை வலியுறுத்தி வருவதாக சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். தமது ஆதரவாளரான இந்த அதிகாரியை ஒப்புக்கொள்ளச் செய்வதன் மூலம் தமக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக சரத்பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள கெப்பிட்டிவெலன தற்போது பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் மைத்துனர் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டு;ள்ளார். எனினும் இதனை மறுத்துள்ள மஹிந்த பாலசூரிய கைது செய்யப்பட்டுள்ள கெப்பிட்டிவெலன தமது தூரத்து சொந்தக்காரரே எனத் தெரிவித்துள்ளார்.

யானை - அன்னம் சின்னம் தொடர்பில் எதிர்க்கட்சிகளிடையே முரண்பாடு

செய்திகள்

கட்சி சின்னம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கிடையில் முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட அதிக நாட்டம் காட்டுவதாகவும், ஜே.வி.பி யானைச் சின்னத்தின்கீழ் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அன்னபட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே ஜே.வி.பி.யின் நிலைப்பாடாக காணப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட்டால், ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் ஏனைய கட்சிகளின்; ஆதரவுடன் ஜே.வி.பி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடுமாறு ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் அவர் எவ்வித பதிலையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அன்னப்பட்சி சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை தேர்தலில் களமிறக்கும் முயற்சிகளை பொன்சேகா மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யானைச் சின்னம் தொடர்பில் ஜே.வி.பியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின்N பாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஜே.வி.பி மேற்கொண்ட உடன்படிக்கையின் மூலம் ஜே.வி.பி 39 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதுடன், சில சிரேஸ்ட சுதந்திரக் கட்சித் தலைவர்கள் தேர்தலில் தோல்வியைத் தழுவினர். இதனைக் கருத்திற் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் ஜே.வி.பியுடன் கூட்டணி சேர்வதில் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் படையெடுத்து வரும் பெரும்பான்மையின வீதியோர வியாபாரிகளால் யாழ் நகரம் திண்டாட்டம்

செய்திகள்

தெற்கிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் படையெடுத்துவரும் பெரும்பான்மையின வீதியோர வியாபாரிகளால் யாழ் நகரம் திண்டாடி வருகின்றது. அவர்கள் எழுந்தமானமாக வீதியோரங்களில் கடைகளை அமைத்து வருகின்றனர். நல்லூர் உள்ளிட்ட பிரதான இந்து ஆலயங்களும் இதற்குத் தப்பவில்லை. இந்த அத்துமீறல்கள் தொடர்பில் வணிகக் கழகங்கள் ஆலய நிர்வாகங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பலவும் மாநகரசபை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளன. எனினும் தென்னிலங்கைத் தலைமைக்குப் பயந்து மாநகரசபை முதல்வர் மற்றும் மாநகரசபை பணியாளர்கள் தமது கடமைகளை ஆற்றத் தடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் ரஷ்ய விஜயமும் சந்திப்புகளும்..

செய்திகள்

ரஷ்யாவுக்கு மூன்றுநாள் விஜயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றுள்ளார். இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு இருக்கும் ஜனாதிபதி, ரஷ்ய அதிபரை சந்தித்து ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்குவதற்கும், சீர்செய்வதற்கான கடன் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிடவுள்ளார். ரஷ்யாவை உண்மையான உற்ற நண்பனாக இலங்கை பார்க்கிறது. ஐ.நா பாதுகாப்பு சபையின் மற்றுமொரு நிரந்தர உறுப்பினரான சீனாவுடன் இணைந்து இலங்கை அரசின்மீது போர் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவாதம் வருவதை ரஷ்யா தடுத்து இருந்தது. பலமாத காலமாகவே, ரஷ்யாவுக்கு நன்றிகூறி இலங்கையில் இருக்கின்ற ரஷ்ய தூதரகத்துக்கு முன்பாக பதாதை ஒன்று தொங்கி வருகிறது. இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின்போது, சுமார் 300மில்லியன் டொலர் மதிப்பிலான கடன் இலங்கைக்கு கொடுப்பது தொடர்பான ஒப்பந்தம் கையொப்பமாகும் என்றும், இந்த கடன் ரஷ்ய ஆயுதங்களை வாங்குவதற்கும், சிவில் மற்றும் இராணுவ உபயோகம் கொண்ட பொருட்களை வாங்குவதற்காகவும் கொடுக்கப்படுகிறது என ரஷ்யாவின் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த கடன் ஏற்கனவே இலங்கையிடம் இருக்கும் ரஷ்ய ஆயுதங்களை சீர்செய்யவும் பயன்படும் என்று விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆயுதம் மட்டுமன்றி தேயிலை வியாபாரத்திலும் இருநாடுகளுக்கும் இடையில் உறவு நிலவிவருகிறது. இலங்கை தேயிலையை அதிகமாக வாங்கும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா இருக்கிறது.

கொழும்புத்துறை கொலை தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி உட்பட இருவர் கைது

செய்திகள்

யாழ் கொழும்புத்துறையில் கடந்த 3ம் திகதி இடம்பெற்ற கொடுரமான கொலைச் சம்பவம் தொடர்பாக கொலையுண்ட எஸ்.சிவராசாவின் மனைவி உட்பட இருவரை யாழ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இக்கொலையினால் கொழும்புத்துறையே கதிகலங்கியதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை யாழ் குடத்தனைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை பட்டம்விட்டு விளையாடியபோது 10வயதான வரதராசா வசந்தராஜ் எனும் சிறுவன் கிணற்றில் தவறிவீழ்ந்து மரணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியா சென்ற 45இலங்கைத் தமிழர்கள் படகுடன் மீட்பு

செய்திகள்

அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிச்சென்ற நிலையில் 45 இலங்கைத் தமிழ் அகதிகள் இன்றுபகல் காப்பாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகாமையில் படகொன்றில் சென்ற நிலையில் படகில் எரிபொருள் தீர்ந்ததுடன், உணவு மற்றும் நீர் அன்றி அவலக்குரல் எழுப்பிய நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்பாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த இலங்கையர்கள் கடந்தமாதம் 20ம் திகதி இலங்கையிலிருந்து படகில் புறப்பட்டுள்ளதுடன், நான்கு நாட்களுக்கும் மேல் உணவு மற்றும் நீரின்றி அவதியுற்றுள்ளதாகவும், அவர்களுக்கு அம்மைநோய் மற்றும் வயிற்றோட்டம் என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மன்னாரில் மீள்குடியேறியோரின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் மன்னார் மாவட்ட அதிகாரிகளுக்குமிடையில் இன்றுமுற்பகல் மன்னார் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சந்திப்பின்போது மன்னார் மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசரகால சட்டம் தொடர்பில் ஐ.தே.கட்சியின் லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி கேள்வி

செய்திகள்

வட பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றி இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற அவசரகாலச் சட்டம் தேவையெனில் ஏன் நாடு முழுவதும் அச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்? வடபகுதியில் மட்டும் அதை அமுல்படுத்தலாமே? என ஐ.தே.கட்சி எம்.பி.லக்ஷ்மன் செனவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் எதிரணிகளை அடக்குவதற்கே பயன்படுத்துகிறது. எனவே ஐ.தே.கட்சி இதனை எதிர்க்கின்றதென்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே லக்ஷ்மன் செனவிரட்ன எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எச்எஸ்பிசி (HSBC) வங்கியின் கிளை

செய்திகள்

எச்எஸ்பிசி (HSBC) வங்கியின் கிளையொன்று அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து வடக்கில் பெருமளவு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த வருடம் மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கில் இலங்கை வங்கிகள் புதிய கிளைகளை அமைக்க ஆரம்பித்தன. வடக்கில் 73 புதிய வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்திருந்தது.
இதனடிப்படையில் இலங்கை வங்கிகளே இதுவரை தமது கிளைகளை வடக்கில் திறந்து வந்தன. அடுத்த வாரம் முதலாவது வெளிநாட்டு வங்கியான எச்எஸ்பிசி வங்கி தனது கிளையை திறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில் வன்னி மாவட்டங்களான கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் நாட்டின் 62வது சுதந்திரதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலகம் உட்பட வன்னியிலுள்ள திணைக்களங்கள் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் படைமுகாம்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திரதின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன. அந்தந்த நிகழ்வுகளில் திணைக்களத்தலைவர்கள் அரச அதிகாரிகள் படை அதிகாரிகள் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின நிகழ்வுகளை சிறப்பித்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி உட்பட துணுக்காய் மல்லாவி கனகராயன்குளம் பூநகரி மற்றும் மாங்குளம் பிரதேசங்களிலும் சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ சட்ட திட்டங்கள் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது

செய்திகள்

தண்டனை, இம்சை, இராணுவ சட்ட திட்டங்கள் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகள், ஊழல் மோசடியற்ற சேவை மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமது அரசியல் பலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எச்சந்தர்ப்பத்திலும் எத்த கைய தீர்மானத்தையும் மேற்கொண்ட தில்லையென தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டின் ஒரு அங்குல நிலத்தையாவது காட்டிக் கொடுக்கப் போவதில்லையெனவும் தெரிவித்தார்.
இலங்கையின் 62வது சுதந்திரதின தேசிய நிகழ்வு கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சிங்களவர்கள் விரும்பும் தமிழரிடம் அதிகாரத்தை வழங்கவும்-தயான் ஜயதிலக்க..!

செய்திகள்

ட்ரான்ஸ்கரன்ட் இணையத்தளத்தில் கட்டுரையொன்றை எழுதியுள்ள ஜெனிவாவுக்கான முன்னாள் இலங்கையின் பிரதிநிதி தயான் ஜயதிலக்க, இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு சிங்களவர்கள் விரும்பும் தமிழ் தலைவர் ஒருவரிடம் அதிகாரத்தை வழங்குவதன்மூலம் மாத்திரமே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த தமிழ் தலைவர் யார் என எண்ணுவதில் சிரமமில்லை எனவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என தயான் ஜயதிலக்க மறைமுகமாக கூறியுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் நடைபெறும் தேர்தல்களில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறும் என கருதப்படுவதால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எப்படியேனும் வடமாகாணத்தின் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தயான் ஜயதிலக்க வெளிப்படுத்தி யுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சிங்கள மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஏற்றுக் கொண்;;;;;டுள்ளனரா என ஜயதிலக்க உறுதியாக கூறவில்லை. சிங்கள மக்கள் விரும்பும் தலைவரிடம் மாத்திரம் அரசியல் அதிகாரத்தை வழங்க வேண்டும் என கூறியுள்ளதன் மூலம் தயான் ஜயதிலக்க தமிழ் தலைவரை தெரிவு செய்யும் அதிகாரத்தை சிங்களவர்களுக்கு வழங்கியுள்ளார்.

17வது திருத்தச் சட்டமூலம் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது -தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு..!

செய்திகள்

17வது திருத்தச்சட்ட மூலம் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக அமையாதென தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார் 11மணித்தியாலங்கள் கூடி ஆராயப்பட்டதன் பின்னர் இந்த 17வது திருத்தச்சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டதாகவும் இந்த சட்டமூலத்தில் பயனில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டமூலத்திற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 215பேர் ஆதரவளித்தபோதிலும் இதனை நடைமுறைப்படுத்தும் சரியான பொறிமுறை குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார் 1978ம் ஆண்டு அரசியல் சாசனத்தில் 17வது திருத்தச்சட்டமூலம் ஆகியன அவசரமாக ஏற்படுத்தப்பட்டதாகவும் இதனால் இதன் பலன்கள் குறித்து நம்பிக்கை கொள்ளமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உரிய முனைப்புடன் குறித்த அரசியல் சாசன திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டிருந்தால் பல்வேறு நன்மைகள் கிட்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.