ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு - பிள்ளையான்

செய்திகள்

ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள ரி.எம்.பி.வி தலைவரும் கிழக்கு முதல்வருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான அரசியல் குழுவொன்று இந்தவாரத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது கிழக்கு மாகாண மக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பில் ஆராயவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கோவன் வீட்டுக்கு பெற்றோல் குண்டுவீச்சு நடத்தியதாகக் கூறப்பட்டு மூவர் தமிழகத்தில் கைது

செய்திகள்

இந்திய முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான இளங்கோவன் வீட்டுக்கு பெற்றோல் குண்டுவீச்சு நடத்தியதாகக் கூறப்பட்டு மூவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் திரைப்பட இயக்குநர் சீமானினால் நிர்வகிக்கப்படும் நாம் தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான மூன்று பேரும் மித்திரன், மணி மற்றும் அருண் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொலிஸ் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.டீ.ஜெய்ன் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி கனடாவில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதன் பின்னர் இயக்குநர் சீமான் நேற்று சென்னையை அடைந்துள்ளார்.

தமிழ்க்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி செல்வராஜா கஜேந்திரன் நாடு திரும்பினார்

செய்திகள்

தமிழ்க் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார். இவர் கடந்த 3வருடங்களுக்கும் மேலாக ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தார். இப்போது தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயானந்தமூர்த்தி மாத்திரம் தொடர்ந்தும் லண்டனில் தங்கியிருக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் இறுதியாக நோர்வே நாட்டில் தங்கியிருந்த நிலையில் நேற்று நாடு திரும்பியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பா.உ பதவியேற்பின்போது யுத்தம் ஒன்றை அரசு திணித்தால் யாழ்ப்பாணத்தில் இருந்து 40இ000க்கு மேற்பட்ட சவப்பெட்டிகள் கொழும்புவரும் என்று பாராளுமன்றத்தில் முழக்கமிட்டிருந்தார். பின்னர் இவர் கூறிய சவப்பெட்டிகளை அரசு வன்னியில் தயாராக்கியபோது அங்கிருந்து தப்பித்து ஜரோப்பாவில் தஞ்சமடைந்தவர்தான் இந்த கஜேந்திரன். இன்று பதவி பறிபோகும் காலம் நெருங்கிவரும் நிலையில்இ மாவீரர்தினத்தில் பங்கு கொள்ளாமல் 40இ000 சவப்பெட்டிகளை ஏற்றமுடியாமலும் கொழும்பு நோக்கி விமானம் ஏறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தமிழ்க் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தொடர்ந்தும் பிரித்தானியாவில் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்மக்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் -இ.தொ.காங்கிரஸ்

செய்திகள்

தமிழ் மக்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம்திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கக் கூடிய சாத்தியமில்லை என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அவர் ஓர் சர்வாதிகாரியாகவே செயற்படுவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாற்றுக் கருத்துக்களுக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகா அடக்குமுறைகளை பிரயோகிக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். நாட்டை ஆட்சி செய்வதற்கு தேவையான அரசியல் அறிவோ அல்லது அனுபவமோ சரத் பொன்சேகாவிற்குக் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்கள் ஒருபோதும் பொன்சேகாவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு அரசாங்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசாங்கம் மதிப்பளிக்காது என அவர் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட மக்கள் மத்தியில் ஜனாதிபதியின் மீதான நன்மதிப்பு உயர்வடைந்துள்ளதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கொட்டகலையில் நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசியல் நாகரீகத்தையும், பண்பையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சுவிஸ் மகாநாடு ஒரு அடித்தளமாக அமைந்தது- புளொட் தலைவர் உரை

செய்திகள்

யாழ். ஸ்கந்தவரோதயக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (கொழும்பு) ஏற்பாட்டில் யாழ். ஸ்கந்தரோதயக் கல்லூரியின் ஸ்தாபகர் திரு.கந்தையா அவர்களின் நினைவு விழாவும், அக்கல்லூரியின் முன்னைநாள் அதிபர் அமரர்.திரு.வி. சிவசுப்பிரமணியம் (வைசர்) அவர்களின் நூறாவது பிறந்ததின நினைவு விழாவும் கொழும்பு, வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தையில் அமைந்துள்ள தமிழ்ச்சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 29.11.2009 மாலை 4.30மணிமுதல் இரவு 7.30வரை இடம்பெற்றது. இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், தேவாரம், வாழ்த்துப்பா நிகழ்வுகளைத் தொடர்ந்து திரு.ச.மகேந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து திரு.க.நீலகண்டன், கலாநிதி.மு.கதிர்காமநாதன், திரு.ந.கருணைஆனந்தன், புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், டொக்டர் டபிள்யூ.திசேரா, கலாநிதி என்.தணிகாசலம்பிள்ளை, டொக்டர் சி.சிவானந்தராசா, திரு.து.ரகு ஆகியோர் சிறப்புரையாற்றினர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள், ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஸ்தாபகர் கந்தையா மற்றும் அதன் முன்னைநாள் அதிபர் அமரர் வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் குணங்களைப் பற்றியும், பாடசாலையின் சிறப்பு பற்றியும், அங்கு தான் பயின்ற காலங்களையும் பற்றி எடுத்துக் கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். ஸ்கந்தவரோதயக் கல்லூரியானது என்னுடைய பேரனாருடைய முகாமைத்துவத்தின் கீழ் இருந்தது. இந்நிலையில் 60ம் ஆண்டுத் தேர்தலின் போது உடுவில் தொகுதியில் எனது தந்தையாருடன் எதிர்த்துப் போட்டியிடுவதற்கு, வீ.பொன்னம்பலம் அவர்களுக்கு லீவு கொடுக்கப்பட்டு அவர் தேர்தலில் போட்டியிட்டார். அது மாத்திரமல்ல அந்த தேர்தல் காலங்களில் வீ.பொன்னம்பலம் அவர்கள் எங்களுடைய பகுதிக்கு வருகின்ற போது எங்களது வீட்டுக்கு வந்து தேனீர் அருந்திச் செல்வது ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல் எனது தந்தையாரும் வீ.பொன்னம்பலம் அவர்களின் அளவெட்டிப் பகுதிகளுக்கு செல்கின்ற போது வீ.பொன்னம்பலம் அவர்களின் வீட்டிற்குச் சென்று தேனீர் அருந்திச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படியான ஒரு அரசியலில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தனிமனித பண்புக்கள் அன்று நிறைந்திருந்தது. இந்த பண்புகள் முழுக்கமுழுக்க அழிக்கப்பட்டு, மாற்றுக்கருத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் கண்டு பயந்து ஒதுங்கி வாழுகின்ற ஒரு நிலைப்பாட்டில் கடந்த மே 18ற்கும் பின்பு ஒரு மாற்றம் வருவதை சுவிஸ் மாநாட்டில் நான் அறிந்து கொண்டேன். அங்கு அனைவரும் ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். முகத்தை முகம்கொடுத்துக் கதைக்காதவர்கள் கூட ஒருவரையொருவர் பார்த்து அன்னியோன்யமாக கதைக்கின்ற, ஒன்றாக இருந்து உணவருந்துகின்ற நிலைகள் எல்லாம் அங்கு நிலவியது. சுவிஸ் மகாநாட்டில் வேறு எதையும் முழுமையாக சாதிக்காது விட்டாலும் ஒரு அரசியல் நாகரீகத்தையும், பண்பையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அந்த மகாநாடு ஒரு அடித்தளமாக அமைந்தது என்றே நான் கருதுகிறேன். தற்போதைய நிலையில் தமிழ் சமூகத்தின் கல்வியானது ஒரு பின்தங்கிய நிலைமையில் இருக்கின்றது. இன்றைக்கு முகாம்களில்கூட பாடசாலைகளை நடத்தி அந்தப் பிள்ளைகள் பரீட்சைகளில் தோற்றச் செய்வதற்காக பல அதிகாரிகள், ஆசிரியர்கள் எல்லாம் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். தமிழ் சமூகத்தைப் பொறுத்தமட்டில் கல்விதான் அவர்களின் ஒரு மூலதனமாக இருந்திருக்கிறது. அது இன்று முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில் இதனை மீளக் கட்டியெழுப்பும் கடமையானது தனியாக கல்விச் சமூகத்தினுடைய மாத்திரம் என்று கருதாமல், தமிழ் சமூகத்தில் இருக்கின்ற அனைவருமே தங்களால் இயன்றளவு உதவிகளைப் புரிந்து வடகிழக்கில் முற்றாக அழிந்துள்ள எங்களுடைய கல்விச் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மகாவௌ ரயில் நிலையமருகே ஒருவர் கொலை

குறுஞ்செய்தி, செய்திகள்

மகாவௌ ரயில் நிலையமருகே ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு 12மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

வாக்காளர்களின் விண்ணப்பங்களை அனுப்புவது தொடர்பில் விபரம்

செய்திகள்

கொழும்பு மாவட்டத்தில் பதிவுசெய்த வாக்காளர்களின் விண்ணப்பங்கள் யாவும் பிரதித்தேர்தல் ஆணையாளர், கொழும்பு மாவட்டம், 395, பழைய கோட்டே றோட், ராஜகிரிய, 10107 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்கள் யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்கள் வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கும் அனுப்பப்படல் வேண்டும். ஏனைய மாவட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்கள் யாவும் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பப்படல் வேண்டும். இதற்குரிய விண்ணப்பப் படிவங்களை தேருநர் பதிவேடுகள் காட்சிக்கு வைக்கப்பட்ட இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கால இடைவெளி மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், விண்ணப்பதாரிகள் தாமதியாது தங்களது விண்ணப்பங்களை உரிய அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் ஊடாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

புலிகளின் “புதிய” சுவிஸ் கிளையினரால் நடத்தப்பட்ட மாவீரர்தின நிகழ்வில் கண்ணீர்புகை பிரயோகம், இளைஞர்மீது கண்மூடித்தனமான தாக்குதல்..

செய்திகள்

anitiger020சுவிஸ்லாந்தின் ப்ரீபேர்க் என்னுமிடத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27.11.2009) அன்று புலிகள் இயக்கத்தின் “புதிய” சுவிஸ் கிளையினரால் நடத்தப்பட்ட மாவீரர்தின நிகழ்வுகளில் பாம்பு குறூப் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் தெருச்சண்டியர் குழுவிற்கும், இளைஞர் குழுவொன்றுக்குமிடையில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு கண்ணீர்ப்புகை ஒன்று பிரயோகம் செய்யப்பட்டதுடன், இதன்காரணமாக அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலையும் ஏற்பட்டிருந்தது. இதன்போது ஏற்பட்ட கைகலப்பு மற்றும் மோதல்களின் போது புலிகளினாலும், மற்றும் பெருமளவு பொதுமக்களினாலும், பாம்புகுறூப் என்னும் தெருச்சண்டியர்களான “சி”, “க” போன்ற ரவுடிகளாலும் (தற்போது சுவிஸ் பொலிசாரின் விசாரணையில் உள்ளதால் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது) குறித்த இளைஞர்மீது பலத்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதுடன், போத்தல்கள், கத்தி, கற்கள் மற்றும் இரும்பு கதிரை போன்றவற்றினாலும் அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது அவ்விளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனையடுத்து இன்று விசாரணைகளை மேற்கொண்ட சுவீஸ் பொலீசார் குறித்த நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கமெராவின் பதிவுகளைக் கொண்டு நடந்த சம்பவத்தை அவதானித்ததன் ஊடாக தாக்குதல் நடத்தியவர்களில் பெரும்பாலானோரை இனங்கண்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள சுவிஸ் பொலீசார், இனிவரும் காலங்களில் இதுபோன்ற மாவீரர்தினம் போன்ற நிகழ்வுகளைத் தடை செய்வதற்கு ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதேநேரம் மேற்படி சம்பவம் குறித்து தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவ்விளைஞரிடம் “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த பிரிவினர் நடத்திய மாவீரர்தின நிகழ்வின் போது இடம்பெற்ற கண்ணீர்ப் புகைப்பிரயோக சம்பவத்திற்கும் தனக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென்றும், தனக்கும் தனது நண்பர்களுக்கும், பாம்புகுறுப் என்கிற தெருச்சண்டியர் குழுவுக்குமிடையில் இருந்த முன்விரோதம் காரணமாகவே தன்மீதான இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப் பட்டிருப்பதாகவும், இது குறித்து பொலீசாரிடம் முறையிட்டுள்ள நிலையில் பொலீசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும், மிகவிரைவில் அவர்கள் நல்லதொரு சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். (Thanks…. ATHIRADY)

தங்காலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு ஜனாதிபதியின் பாரியாரால் திறப்பு

செய்திகள்

அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை தேசிய வைத்தியசாலையில் உலக வங்கியின் நிதியுதவியுடன் 300மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சைப்பிரிவுக்கான கட்டடத்தை ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார். நேற்றுக்காலை தங்காலை அரச ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் பாரியார் திருமதி ராஜபக்ஷவை தென் மாகாண கலாசாரப் பிரிவு நாட்டியக் குழுவினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். அதனையடுத்து தங்காலை அரச வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்திற்கான பெயர்ப் பலகையை திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ திரைநீக்கம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் உரைநிகழ்த்திய அமைச்சர் மஹிந்த அமரவீர, எத்தகைய சவால்கள் எதிர்ப்புகளை சந்திக்க நேரிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார். அதற்கான தீர்மானத்தை மக்கள் எடுத்துவிட்டனர். பயங்கரவாதத்தை ஒழிக்கவும் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பவும் தலைமைத்துவம் வழங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாகி அவரது ஆட்சிக் காலத்தில் ஆசியாவிலேயே வளர்ச்சி மிகு நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவது உறுதி. இதற்கெதிராக எமது உள்ளூர் சக்திகள் செயற்படுகின்றன. ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் சேறுபூசும் நடவடிக்கை களை ஆரம்பித்து ள்ளன. அதேபோன்று எமது நாடு வளர்ச்சியுறுவதைப் பொறுக்காத சில நாடுகளும் உள்ளன. அத்துடன் புலிகளுக்கு உதவும் குழுக்கள் இன்னும் இயங்குகின்றன. இதுபோன்ற பல்வேறு எதிர்ப்புகள் சவால்களுக்கு மத்தியிலும் நாட்டு மக்கள் ஜனாதிபதியுடனேயே உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்;.

மன்னாரிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு நியமணங்கள் வழங்கக்கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

செய்திகள்

மன்னாரிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு நியமணங்கள் வழங்கக்கோரி மாவட்ட செயலகத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். நாடளாவியரீதியில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அரசதுறைகளில் நியமணங்களை வழங்குமாறு தொடர்ச்சியாக ஆர்பாட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையிலேயே மன்னாரிலும் மற்றுமொரு கவனயீர்ப்பு நடவடிக்கை நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்திசெய்து சுமார் 5வருடங்களுக்கு மேலாக அரசதுறைகளில் எதுவித வேலைவாய்ப்புக்களும் இல்லாது அவதிப்படுவதாக தெரிவித்து தமக்கான வேலைவாய்ப்பபை உடன் வழங்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளனார். மன்னார் மாட்ட செயலகத்தின் முன் காலை 10மணியளவில் ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள் சுமார் 30ற்கும் அதிகமானோர் சார்பாக ஜனாதிபதிக்கான மகஜர் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மகஜரை பெற்றுக்கொண்ட மன்னார் மாவட்ட மேலதிக அரசஅதிபர் திருமதி.எஸ். மோகனாதன் கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை ஜனாதிபதிக்கு அணுப்பி வைப்பதாக உறுதியளித்துள்ளார்.

வடமாகாண முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி சமாதானம், சுபீட்சம் நிறைந்த புதிய வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது -ஜனாதிபதி

செய்திகள்

வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் காரணமாக வடமாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி சமாதானம், சுபீட்சம் நிறைந்த புதிய வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தையிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கை உட்பட உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய சமூகத்தவர்களால் கொண்டாடப்படும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஹஜ் யாத்திரையையும் தியாகத்தையும் நினைவூட்டும் இப்பெருநாள் உலக முஸ்லிம்களின் மிகப்பெரிய வருடாந்த நிகழ்வாகக் காணப்படுகின்றது. இன்றைய நாளில் இலங்கையிலிருந்து சுமார் 500பேர்கள் உட்பட சுமார் 4மில்லியன் முஸ்லிம்கள் புனித மக்கா நகரில் ஒன்றுகூடி ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றனர். ஹஜ் யாத்திரையானது பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஐக்கியத்தோடும் சகோதரத்துவ உணர்வுடனும் தமது கிரியைகளை மேற்கொள்வதை அடையாளப்படுத்தி நிற்கின்றது. இந்த ஐக்கியம் அவர்களது வாழ்க்கையில் நீடித்து நிலைத்திருப்பதோடு அவர்கள் அதனை ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களுடனும் மானிட சகோதரத்துவ உணர்வுடன் பரிமாறிக் கொள்கின்றனர். இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் எமது மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். அவர்கள் வரலாற்று நெடுகிலும் எமது நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழ்ந்து வந்துள்ளதுடன் அதனைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தும் வருகின்றனர். மூன்று தசாப்தகால பயங்கரவாதம் முற்றுப் பெற்றுள்ள இச்சூழ்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களோடு அச்சமின்றி வாழுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு மகிழ்ச்சியும் சமாதானமும் மிக்க நன்நாளாக இருக்க எனது நல்வாழ்த்துக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும், ஜனநாயக மக்கள் முன்னணியும் பேச்சுவார்த்தை

செய்திகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும், ஜனநாயக மக்கள் முன்னணியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுவான தமிழ் வேட்பாளர் ஒருவரை போட்டியிடச் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதென ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் அரசியல் செயற்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் வேட்பாளர் ஒருவரை பெயரிடுவதா அல்லது ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை இறுதித் தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலைப் புறக்கணித்தல் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தல் ஆகிய யோசனைத் திட்டங்களை அரசியல் செயற்குழு நிராகரித்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்கும் ஜே.வி.பி.யின் முதலாவது பிரசாரக் கூட்டத்தைத் தடைசெய்ததை ஆட்சேபித்து ஜே.வி.பி. முறைப்பாடு

செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியினரின் பொதுவேட்பாளராக போட்டியிடவிருக்கும் ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்கும் ஜே.வி.பி.யின் முதலாவது பிரசாரக்கூட்டத்தைத் தடைசெய்ததை ஆட்சேபித்து ஜே.வி.பி. நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்தில் முதல்தடவையாக ஜெனரல் சரத்பொன்சேகா மேடையேறவிருந்த நிலையில் கூட்டத்துக்கு தடை போடப்பட்டுள்ளது. நாளை நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளியரங்கில் இந்தப் பிரசாரக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஜே.வி.பி.செய்திருந்தது. இதற்கான அனுமதியும் ஏற்கனவே பெறப்பட்டிருந்த நிலையில் கோட்டே நகரசபை குறுகிய அரசியல் நோக்குடன் செயற்பட்டு இக்கூட்டத்தை தடைசெய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் இதன்மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டிருப்பதாகவும் ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது. ஜே.வி.பி.ஒழுங்கு செய்த இந்தப் பிரசாரக்கூட்டத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட அனுமதியை அநீதியான முறையிலும் நேர்மையற்ற வகையிலும் தடைசெய்ய முற்பட்டிருப்பதாகவும் இதன்மூலம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், கூட்டங்களை நடத்தும் உரிமை, பேச்சுச்சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மீனவர்கள் 59பேர் சென்னை காசிமேடு கடற்பிரதேசத்தில் கைது

செய்திகள்

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 59இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் சென்னை காசிமேடு கடற்பிரதேசத்தில் வைத்தே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களிடமிருந்து பதினொரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் சிலரிடம் தம்மை அடையாளப்படுத்தும் ஆவணங்கள் காணப்படவில்லையென்றும் தமிழக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 2லட்சத்திற்கும் அதிகமான அரச சேவையாளர்கள் கடமை

செய்திகள்

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 2லட்சத்திற்கும் அதிகமான அரச சேவையாளர்கள் கடமையாற்றுவார்கள் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபட விரும்பும் அரச சேவையாளர்கள் மாவட்ட செயலகங்களின் ஊடாக விண்ணப்பிக்க முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் டிசம்பர் 17ம் திகதி முற்பகல் 9மணிமுதல் 11மணிவரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியுமென்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும் -சர்வதேச மன்னிப்புசபை

செய்திகள்

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு உரியஅழுத்தங்களை கொடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புசபை, பொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேற்கிந்திய தீவுகளின் ரினிடாட் என்ட் டபேக்கோவில் கூடியுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்களை தடுத்துவைத்துள்ள கொள்கையை இலங்கை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையை நாடுகளின் தலைவர்கள் முன்வைக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புசபை கேட்டுள்ளது. அத்துடன், இலங்கை மக்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கேட்டுக் கொண்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு.. புளொட் அறிவிப்பு

செய்திகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருக்கின்றோம். ஒன்று இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், அடுத்ததாக தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வாக அரசியல் அதிகாரப்பகிர்வு என்பனவாகும். கடந்த காலங்களில் நாங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக கதைத்து வந்தபோது அவற்றைச் செய்து முடிப்பேன் என்ற உறுதிமொழியைத் தந்திருந்தார். இந்த வகையில் மீள்குடியேற்றம் தொடர்பிலான உறுதிமொழிகளை இப்போது அவர் நிறைவேற்ற ஆரம்பித்திருக்கின்றார். நாங்கள் அந்த மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டிருக்கின்றோம். அங்கு மக்களின் வசதிகள் முழுமையாக செய்து கொடுக்கப்படாவிட்டாலும் மக்கள் தங்களுடைய சொந்த நிலத்திற்கு வந்த திருப்தியில் வாழ்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களுடைய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பதற்கு தொடர்ந்தும் நாங்கள் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டு வருகிறோம். அவற்றைச் செய்வதாக அரசாங்கமும் உறுதியளித்திருக்கின்றது. இப்போது யுத்தம் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், தன்னுடைய மகிந்த சிந்தனையின் இரண்டாம் தவணையில் ஒரு நியாயமான தீர்வொன்றை நிச்சயமாக வழங்குவேன் என்று எங்களுக்கு உறுதி தந்திருக்கின்றார். இப்படியான நிகழ்ச்சி நிரல் ஒன்று நடந்து கொண்டிருக்கின்றபோது இந்த நிகழ்ச்சி நிரலைக் குழப்பிவிடக் கூடாது. இதனடிப்படையில் எமது கட்சி அவரை ஆதரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத்பொன்சேகா அரசியல் பிரவேசத்துக்கான முதலாவது செய்தியாளர் சந்திப்பை விஹாரையில் நடத்துவதற்குத் திட்டம்

செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறங்கும் ஜெனரல் சரத் பொன்சேகா தமது அரசியல் பிரவேசத்துக்கான முதலாவது செய்தியாளர் சந்திப்பை விஹாரை ஒன்றிலேயே நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது. நாளை மறுதினம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுவரும் இந்தச் செய்தியாளர் மாநாடு பெரும்பாலும் களனி ரஜமகா விகாரையில் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. செய்தியாளர் மாநாட்டுக்காக நான்கு, ஐந்து விஹாரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எனினும், பாதுகாப்பு முன்னேற்பாடு கருதி எந்த விஹாரையில் அது நடைபெறும் என்பதை இறுதி நேரத்திலேயே தீர்மானித்து அறிவிப்பது என சரத் பொன்சேகாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஜே.ஆர். ஜெயவர்த்தன போன்ற அர சியல் தலைவர்கள் தங் கள் அரசியல் பிரவேசத்தையும், பிறமுக்கிய அரசியல் நடவடிக்கைகளின் ஆரம்பத்தையும் களனி விஹாரையிலிருந்து மேற்கொண்டனர் என்பதால் அதேபாணியை பொன்சேகாவும் பின்பற்ற விரும்புகின்றார் என்று கூறப்படுகின்றது.

ஜனவரி 26ம் திகதி ஜனாதிபதி தேர்தல் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது

செய்திகள்

இலங்கையில் 6வது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது இலங்கையில் தற்Nபுhது பதவியில் உள்ள ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில் இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளது இந்நிலையில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் முனைப்பு பெற்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பில் ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச பகுதிகளில் விமானப்படையினர் மேற்கொண்ட தேடுதல்களின்போது விடுதலைப்புலிகளால் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதன்போது தலைக்கவசத்துடனான நைட்விஷன் கோகுள் 1, சிறியரக விமான அன்ரனா 2, வீ800 ரேடியோ 4, வேரி பிஸ்டல் 02, துப்பாக்கி கார்டேஜஸ் 300 போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன ஆயுதங்களில் அடங்கியுள்ளன என விமானப்படை தெரிவித்துள்ளது.