ஜனாதிபதியின் ரஷ்ய விஜயமும் சந்திப்புகளும்..
7 February 2010 செய்திகள்ரஷ்யாவுக்கு மூன்றுநாள் விஜயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றுள்ளார். இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு இருக்கும் ஜனாதிபதி, ரஷ்ய அதிபரை சந்தித்து ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்குவதற்கும், சீர்செய்வதற்கான கடன் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிடவுள்ளார். ரஷ்யாவை உண்மையான உற்ற நண்பனாக இலங்கை பார்க்கிறது. ஐ.நா பாதுகாப்பு சபையின் மற்றுமொரு நிரந்தர உறுப்பினரான சீனாவுடன் இணைந்து இலங்கை அரசின்மீது போர் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவாதம் வருவதை ரஷ்யா தடுத்து இருந்தது. பலமாத காலமாகவே, ரஷ்யாவுக்கு நன்றிகூறி இலங்கையில் இருக்கின்ற ரஷ்ய தூதரகத்துக்கு முன்பாக பதாதை ஒன்று தொங்கி வருகிறது. இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின்போது, சுமார் 300மில்லியன் டொலர் மதிப்பிலான கடன் இலங்கைக்கு கொடுப்பது தொடர்பான ஒப்பந்தம் கையொப்பமாகும் என்றும், இந்த கடன் ரஷ்ய ஆயுதங்களை வாங்குவதற்கும், சிவில் மற்றும் இராணுவ உபயோகம் கொண்ட பொருட்களை வாங்குவதற்காகவும் கொடுக்கப்படுகிறது என ரஷ்யாவின் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த கடன் ஏற்கனவே இலங்கையிடம் இருக்கும் ரஷ்ய ஆயுதங்களை சீர்செய்யவும் பயன்படும் என்று விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆயுதம் மட்டுமன்றி தேயிலை வியாபாரத்திலும் இருநாடுகளுக்கும் இடையில் உறவு நிலவிவருகிறது. இலங்கை தேயிலையை அதிகமாக வாங்கும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா இருக்கிறது.
