சுவிஸில் இலங்கை டயஸ்போராவின் சார்பில் தமிழ், சிங்கள கலாச்சார நிகழ்வு- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)
9 March 2010 செய்திகள்
சுவிஸ்லாந்திலுள்ள இலங்கை டயஸ்போராவின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை மாலை தமிழ், சிங்கள கலாச்சார நிகழ்வொன்று சுவிஸ்லாந்தின் பிரிபெர்க் மாநிலத்தில் நடைபெற்றது. சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் சிங்கள பொதுமக்கள் பகிரங்கமாக ஒன்றுகூடி நடாத்திய கலைநிகழ்ச்சி இதுவாகும். மேற்படி நிகழ்வில் பெருந்திரளான தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து கலந்து கொண்டிருந்ததுடன், இதில் பிரதம விருந்தினர்களாக ஜெர்மனி மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றும் திரு.ரி.பி.மடுவகெதர, சுவிஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் திருமதி.சேனகா செனவிரத்ன, பௌத்த மதகுருவான மதிப்புக்குரிய திரு.கோட்டேபாய், மற்றும் இந்து மதகுருவான சூரிச் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலய குருவான திரு.சர்மா எனும் திரு.சரகணபவானந்த குருக்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். அத்துடன் தமிழ் அமைப்புக்களின் சார்பில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டிருந்தனர். குத்துவிளக்கேற்றல் மற்றும் தேசியகீதத்துடன் ஆரம்பமான மேற்படி கலை நிகழ்வின் போது கண்டிய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல தமிழ், சிங்கள கலை நிகழ்ச்சிகளும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தமிழ் சிங்கள பாடல்களையும் பாடியமையும் இடம்பெற்றன. சுவிஸ் வரலாற்றில் முதன் முறையாக தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து மேற்படி கலை நிகழ்ச்சியினை நடத்தியமையும், பெருமளவு தமிழ், சிங்கள மக்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயாகும். மேற்படி கலை நிகழ்வுக்கு பிரபல வர்த்தகர்கள் பலரும் அனுசரணை வழங்கியிருந்தனர். கடந்த மே18 புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் தற்போது வர்த்தகர்கள் முதற்கொண்டு பொதுமக்கள் வரை அனைவருமே எந்தவித பயபீதியுமின்றி, அச்சுறுத்திலின்றி மனமுவந்து இவ்வாறான நிகழ்வொன்றில் நிம்மதியாக பங்கு கொண்டிருந்தமையும் சுட்டிக் காட்டத்தக்க விடயமாகும். (தகவல் மற்றும் புகைப்பட உதவி.. Srilanka Diaspora -Swiss)























































































