ஐ.நா.அரசியல்துறை பிரதிப் பொதுச் செயலாளர் இலங்கை வரவுள்ளார்..!
9 March 2010 செய்திகள்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் துறை பிரதிப் பொதுசெயலாளர் லின் பெஸ்கோ விரைவில் மீண்டும் இலங்கை வரவுள்ளார் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்காகவே அவர் இலங்கை வரவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் பான் கீமூன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நியுயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இலங்கை குறித்து மேற்கொண்ட உரையிலேயே பொதுசெயலாளர் இவ்விடயம் குறித்து அறிவித்துள்ளார். இதன்போது யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்குதல் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடிமர்த்தல் மற்றும் பொறுப்பு வாய்ந்த முறைமையொன்றை உருவாக்குதல் போன்ற விடயங்களில் இலங்கை மேலும் முன்னேற்றமடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த வியாழக்கிழமை தாம் மேற்கொண்ட தொலைபேசி கலந்துரையாடலின் போது நேரடியாகவும் நேர்மையாகவும் கருத்துக்களை பறிமாற்றிக்கொண்டதாக தெரிவித்துள்ள அதேவேளை யுத்தம் நிறைவடைந்த பின்னர் தாம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது உயர்மட்ட அதிகாரிகள் பல விடயங்கள் குறித்து இணங்கப்பாட்டை எட்டியதாகவும் ஐக்கிய நாடுகள் பொதுசெயலாளர் பான் கீமூன் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர இலங்கை தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிப்பது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்திருப்பதாகவும் ஐ.நா.செயலாளர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.
